மிடில் கிளாஸ் மனசு - 2

எல்லாரும் என்கிட்ட சொன்னாங்க..கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் நீ பதிவு போடவே போறது இல்லைன்னு..அப்ப நான் நினைச்சேன் நம்ப கல்யாணத்தின் போது ஏற்படும் மன அதிர்வை அப்படியே பதிவை போட்டு விட்டா போச்சு இது என்ன பெரிய விசயம்னு.ஆனா இப்ப அதை பத்தி போட வேண்டாம்னு தோணுது. இருந்தாலும் எனது Recepetion அன்று ஏற்பட்ட சின்ன மன அதிர்வலையை இங்கே பதிவு செய்கிறேன்.

எங்களுது திருமணத்தில் கும்பிட்டு கட்டி கொள்ளுதல் என்ற வழக்கம் உள்ளது. அனைவரது காலில் விழ வேண்டும்.பெரியவர் காலில் விழுவது ஒன்றும் தவறு இல்லை என்றாலும் எனது உடல் வாகு கொஞ்சம் இந்த நிகழ்வை தவிர்க்க விரும்பியது.(எனது மனைவி என்னை போலவே குண்டு என்பதால் அவளுக்கும் அப்படியே தோன்றி இருக்க வேண்டும் ).ஆனால் இதை திருமணத்தில் தவிர்க்க இயலாது என்பது நான் அறிந்ததே.தவிர்க்கவும் முடியவில்லை. இதனால் இதை Recepetion -இல் செய்ய கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன்.Recepetion கோபியில் என்பதால் இதை கோபி மக்கள் எதிர் பார்க்கவும் இல்லை. அங்கு இருந்த எங்களது சில உறவினர்கள் இதை எதிர் பார்த்து இருந்தனர் என்பதை நான் அறிந்தேன்.இருந்தாலும் நான் சுனா பானவா இருந்துவிட்டேன். அப்போது எனக்கு ஏழாம் வகுப்பில் இருந்து +2 வரை புத்தகமும் M.Sc வரை நோட் இலவசமாய் குடுத்த சரஸ்வதி டீச்சர் நடக்க முடியாமல் நடந்து வருவது தெரிந்தது.அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது இந்த டீச்சர் வந்தால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்று நான் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருந்தது. அந்த டீச்சர் என் அருகே வருவதற்கு முன் நான் சென்று அந்த டீச்சரை கை பற்றி அழைத்து வந்தேன். கை தூக்கி விட்ட டீச்சர் மட்டும் அல்ல அவர் நான் என் காலரையும் தூக்கி இருக்கும் படி செய்த டீச்சர்.அவர் எங்களுக்காக கொண்டு வந்த பரிசை திறக்க முற்பட்டார் நானும் அவருக்கு அதை பிரிக்க உதவி செய்ய அது ஒரு சாமி படம். நல்ல பொருத்தமான படம். என்ன படம்னு கேட்காதிங்க..படத்தை பாருங்க..இந்த சமயத்தில் மனதில் மறுபடி ஒரு போராட்டம்.நான் இப்போது இவர் காலில் விழுந்தால் எனது உறவினர்கள் என்னை தப்பாய் நினைப்பார்கள்.என்ன செய்வது..அதற்காக இவர் காலில் விழாமலும் இருப்பது என்பது எனக்கு கஷ்டமாய் இருக்க கூடும்.எப்படியும் இவர் காலில் விழுவது என்று முடிவு செய்து அவரை என் இருக்கை வரை அழைத்து வந்து திரும்பினால் நான் கடன் வாங்கிய எனது உறவினர் ஒருவர் முதல் வரிசையில் அமர்ந்து சிரித்த படி இருக்கிறார்.அவரில் காலில் விழாமல் என் டீச்சர் காலில் விழலாமா என்று யோசித்த நிமிடத்தில் என் சிந்தனை தகர்த்தது காமெராவின் பிளாஷ். எனது சரஸ்வதி டீச்சர் வழக்கம் போல் என்னிடம் குரு தட்சணை வாங்காமல் நகர்ந்து சென்றார்.நானும் அடுத்த போட்டோவிற்கு போஸ் குடுக்க (வெட்கமில்லாமல்) சிரித்த படி தயார் ஆனேன்.

இது ஒரு மிக பெரிய நிகழ்வு அல்ல.ஆனால் இது போல் நிறைய சின்ன நிகழ்வுகள் நடந்த படியே கழிகிறது நாட்கள். இது ஏன் என்று பதில் நோக்கிய கேள்விகள்..
நான் விரும்பியதை செய்ய முற்படுவதை விட பிறர் விரும்பாததை (விரும்பாதது என்று நான் நினைப்பதை) செய்யாமல் இருபத்திலேயே வாழ்கை கழிந்து விடுமா.
அது மட்டும் இல்லை என் உறவினர்கள் இல்லாவிடில் அவர் காலில் விழுந்து இருக்கலாம் என்று என்னை நானே ஏமாற்றி நல்லவன் போல் கட்டி கொள்கிறேனா என என்னுள் தொடரும் கேள்விக்கு நடுவில் சினுங்குகிறது என் செல்போன்.பேச்சின் தொடகத்தில் முடிந்து போகிறது பதில் தேடும் பயணம்..


 
இந்த பதிவு ஒன்னும் பாவ விமோசனம் இல்லை.இதை வெளிப்படையாய் சொல்லுவதில் ஒரு சின்ன மன நிறைவு.அப்பறம் நான் ரொம்ப நல்ல பையன் அப்படின்னு ஒரு பில்ட் அப்.அவ்வளவு தான்

Popular Posts