
படிக்க போறேன் என்று சொல்லி தான்
வந்தேன் மொட்டை மாடிக்கு
அடித்த காற்றும் அருகே இருந்த ஆறும்
இதமாய் இருந்தது மனசுக்கு
ஓடும் ஆறை விட ஆற்றுபடுகை அதிகம்
மாலை நேரம் ஆகிவிட்டதால்
ஆங்காங்கே ஆற்றுபடுகை
ஆற்று படுக்கையாக மாறுவதை கண்டேன்.
ஒரு இளைஞன் தனது கையில் எதையோ
வைத்து தேய்த்து கொண்டிருந்தான்.
விளையட வந்த இரு சிறுவர்கள் பெய்த சிறுநீரால்
ஓடும் ஒரு நதி ஆனது திரிவேணி சங்கமமாய்!
சில லாரிகள் மணல் திருட்டு பாவத்தை
சுமக்க முடியாமல் சுமந்து வெளியேறின
படிக்காமல் என்னடா பராக்கு பார்க்கிற என்று
படி படி (பட பட )என பொடனியில் அடித்து
சொன்னது காய போட்டு இருந்த
அப்பாவின் முழு கை சட்டை.
உரக்க படிக்க ஆரமித்தேன்
"ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றின..
No comments:
Post a Comment